எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ரெமி ஓயேடெல்கட்டுரைகள்

நாம் தேவனைத் துதிக்கும் போது

2014 ஆம் ஆண்டு ஒன்பது வயது நிரம்பிய வில்லி, அவர்களுடைய வீட்டு முற்றத்திலிருந்து கடத்தப்பட்டான். அவன் தனக்கு விருப்பமான “எல்லாத் துதியும்” என்ற சுவிசேஷகத் துதி பாடல் ஒன்றினைத் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டேயிருந்தான். அந்த மூன்று மணி நேர கடும் போராட்டத்தில், வில்லியை அமைதியாக இருக்கும்படி கடத்தல்காரர்கள் விடுத்த கட்டளையையும் பொருட்படுத்தாமல் அவன் பாடிக் கொண்டேயிருந்தான். கடைசியாக, கடத்தல்காரர்கள் வில்லியை காரைவிட்டு வெளியேற்றினர். பின்பு, வில்லி அந்த எதிர்பாராத அநுபவத்தை விளக்கிய போது, அவன் தன் பயத்தின் மத்தியிலும் விசுவாசத்தைக் கைவிடாமல் பாடியதைக் கேட்ட கடத்தல் காரர்கள் குழப்பமடைந்தனர், என்றான்.

பயங்கரச் சூழலில் வில்லி செயல்பட்ட விதம், பவுலும் சீலாவும் பகிர்ந்து கொண்ட ஓர் அநுபவத்தைப் போலுள்ளது. வாரினால் அடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பின்பு அவர்கள், “ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும் படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டன; எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று” (அப். 16:25-26).

இந்த அதிசயமான வல்லமையின் வெளிப்பாட்டைக் கண்ட சிறைச் சாலைக்காரன் பவுலும் சீலாவும் ஆராதித்த தேவனாகிய கர்த்தரை விசுவாசித்தான். அவனோடு, அவன் வீட்டாரனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (வச. 27-34) அன்று இரவு துதியின் வழியாக ஆவிக்குரிய கட்டுகளும், மாம்சக் கட்டுகளும் தெறிப்புண்டன.

பவுல், சீலா மற்றும் வில்லியின் அநுபவங்களைப் போன்று நமக்கு கண்களால் காணக்கூடிய அநுபவம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவருடைய ஜனங்களின் துதிக்கு அவர் செவி கொடுப்பார் என்பதைத் தெரிந்து கொள்வோம். அவர் அசையும் போது, சங்கிலிகள் தெறிப்புண்டு போம்.

 

விசுவாசத்தில் உறுதியாயிருத்தல்

டெஸ்மாண்ட் டாஸ் என்பவர் இரண்டாம் உலகப்போருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் யுத்தம் செய்பவனாக அல்ல. அவனுடைய மத நம்பிக்கை அவனை துப்பாக்கியேந்தி செல்வதை அனுமதியாததால், டாஸ், போர் வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்தான். ஒரு யுத்தத்தின் போது, எதிரிகளின் மும்முரமான துப்பாக்கி குண்டுகளையும்  தாண்டி, எழுபத்தைந்து காயமுற்ற வீரர்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றான். அவனுடைய கதை ஒரு செய்தி படமாக வெளியிடப்பட்டது. ஹேக்சா ரிட்ஜ் என்ற திரைப்படமாகவும் வெளியானது.

கிறிஸ்தவ விசுவாச வீரர்களின் பட்டியலில் இத்தகைய தைரியமான நபர்களானள் ஆபிரகாம், மோசே, தாவீது, எலியா, பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறுகின்றன. ஆனாலும் பாராட்டப்படாத விசுவாச வீரர்களானள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும், யூத மதத் தலைவர்களால் தங்களுக்கு ஆபத்து நேரிடும் அபாயம் இருந்த போதிலும், இவர்கள் இயேசுவின் சரீரத்தை கேட்டு வாங்கி, யூதர்களின் முறைமையின் படியே அடக்கம் பண்ணினார்கள் (யோவா. 19:40-42). யூதருக்கு பயந்து இயேசுவின் அந்தரங்க சீடனாக இருந்த யோசேப்புக்கும், இரவு நேரத்தில் மட்டுமே இயேசுவைச் சந்தித்த நிக்கொதேமுவுக்கும், இது ஒரு தைரியமான செயல். (வச .38-39). இதில் இன்னும் நம்மைக் கவர்வது என்னவெனில், இயேசுகிறிஸ்து வெற்றியாக கல்லறையிலிருந்து உயிர்த்தெழுவதற்கு முன்னரே இவர்கள் தங்கள் விசுவாசத்தை உறுதியாய் வெளிப்படுத்தினார்கள். ஏன் ?

இயேசுவின் மரணம் நேர்ந்த விதமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளுமே (மத். 27:50-54) பயந்திருந்த இந்த சீடர்களின் விசுவாசத்தை முற்றிலும் உறுதிபடுத்தின. அவர்கள் மனிதனுக்கு பயப்படுவதைக் காட்டிலும், தேவனுக்குத் தங்களை அர்ப்பணிக்க கற்றுக் கொண்டனர். நாமும் இவர்களைப் போன்று, தேவன் மீதுள்ள விசுவாசத்தின் பொருட்டு, நமக்கு ஆபத்து நேரிடுவதாயினும் ,தைரியமாக செயல்பட்டு, மற்றவர்களுக்கு இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவோம்.

கட்டுப்பாட்டின் மாயை

எலன் லாங்கர் என்ற பெண்மணி 1975ம் ஆண்டு 'கட்டுப்பாட்டின் மாயை" என்ற தலைப்பின் கீழே நம்முடைய வாழ்க்கையின் பலதரப்பட்ட சூழ்நிலையில், நம்முடைய அதிகாரத்தை நாம் பயன்படுத்துவதைக் குறித்த ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டார். அதில் அவர் கண்டுகொண்ட உண்மை என்னவெனில், பல சூழ்நிலைகளில் நம்முடைய ஆதிக்கத்தை உயர்த்தி மதிப்பிட்டுக் கொள்ளுகிறோம். இந்த ஆராய்ச்சியானது, மாயையான தோற்றத்தினை எவ்வாறு உடைத்துப் போடுகிறது என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறது.

லாங்கரின் இந்த ஆராய்ச்சியானது, பல மக்களால் செய்து பார்க்கப்பட்ட பரிசோதனைகளை உள்ளடக்கியதாக இருந்தது. அது புத்தக வடிவில் வெளியிடப்பட ஆயத்தமாக இருந்தது. ஆனால், யாக்கோபு இந்தக் கருத்தினை, லாங்கர் கண்டுபிடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இதைக் கண்டுபிடித்தார். யாக்கோபு 4ம் அதிகாரத்தில், 'மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம்பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள். நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே." (யாக். 4:13-14) என்று எழுதியுள்ளார்.

இந்த மாயமான தோற்றத்திற்கு, யாக்கோபு ஒரு தீர்வினை கொடுக்கிறார். அவர் முழுமையான ஆதிக்கத்தை உடையவருக்கு நேராகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்: 'ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்."

(யாக். 4:15). இந்த ஒருசில வசனங்களிலே யாக்கோபு, மனிதனின் நிலையற்ற தன்மையையும், அதற்கான மாற்று வழியையும் குறிப்பிடுகிறார்.

நாமும் நம்முடைய விதியானது நம் கைகளில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் தம்முடைய வல்லமையான கரங்களில் வைத்துத் தாங்குகிறபடியால், நாம் அவருடையத் திட்டங்களை விசுவாசிக்கலாம்.

உயிருள்ள வண்ணத்தில்

சேவியர் மெக்கூரியின் பத்தாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவனுடைய அத்தை செலினா கண்ணாடி ஒன்றை பரிசாக அனுப்பியிருந்தார். கண்ணாடியை முகத்தில் மாட்டியதுமே அவன் அழுதுவிட்டான். பிறவிலேயே அவனுக்கு நிறக்குருடு இருந்தது. இதுவரையிலும் பார்த்த எல்லாமே சாம்பல், வெள்ளை, கருப்பு நிறங்களில் தான் தெரிந்திருந்தன. ஆனால் அவனுடைய அத்தை அனுப்பியிருந்தது என்குரோமா கண்ணாடிகள்; அதனால் தன் வாழ்நாளிலேயே முதன்முதலாக அவன் நிறங்களைப் பார்க்கமுடிந்தது. தன்னைச் சுற்றிலுமிருந்த ஒவ்வொரு அழகையும் கண்டு அவன் மகிழ்ச்சியில் திளைத்தபடியால், ஏதோ அற்புதம் நிகழ்ந்துவிட்டது போல அவனுடைய குடும்பத்தாரும் உணர்ந்தார்கள்.

தேவனிடமிருந்து வண்ணவண்ண ஒளிக்கதிர்கள் பளிச்சிட்ட காட்சியின் அழகைக் கண்டபோது, அப்போஸ்தலனாகிய யோவான் திக்குமுக்காடிப் போனார் (வெளி. 1:17). உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை அவருடைய முழுமகிமையில் காண்கிற பாக்கியம் யோவானுக்கு சற்று கிடைத்தது. “வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று … அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்கள் ... புறப்பட்டன” (வெளி. 4:2-5).

முன்னொரு காலத்தில் எசேக்கியேல் இதைப் போன்றதொரு தரிசனத்தைக் கண்டார். "நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும்" அதன் மீது உட்கார்ந்திருந்தவர் "அக்கினிமயமான சொகுசாவின்  நிறமாக இருந்ததையும், அவரைச் சுற்றிலும் மகிமையின் பிரகாசமாக இருந்ததையும் கண்டார்.

உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை ஒரு நாளில் நாம் முகமுகமாகச் சந்திக்கப்போகிறோம். அப்போது நாம் காணப்போகிற மிக அற்புதமான காட்சியை இந்தத் தரிசனங்கள் சற்றே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. தேவனுடைய சிருஷ்டிப்பில் இப்போது வெளிப்படுகிற தேவ அழகைக் கண்டு நாம் கொண்டாடலாம், இனி வெளிப்படயிருக்கும் மகிமையைக் காண்கிற ஆவலோடு வாழலாம்.

மாயைகளை எரிப்போம்

1497ம் ஆண்டு, கிரோலாமா ஸவனரோலா என்கிற ஒரு துறவி, நெருப்பு ஒன்றைத் துவக்கினார். பிறகு, மக்களை பாவம் செய்யத்தூண்டுவதாக அல்லது மதக்கடமைகளைப் புறக்கணிக்கச் செய்வதாக தாங்கள் கருதிய பொருட்களை எல்லாம் சேகரிப்பதில் அவரும் அவருடைய சீடர்களும் பல மாதங்கள் செலவிட்டார்கள். அவற்றில் கலைபடைப்புகள், அழகுசாதனங்கள், பிறசாதனங்கள், துணிமணிகள் போன்றவை அடங்கும். குறிப்பிட்ட ஒரு நாளில், ஆயிரக்கணக்கான மாயை பொருட்களை இத்தாலியின் ஃபிளாரன்ஸ் என்கிற இடத்திலுள்ள ஒரு பொது சதுக்கத்தில் குவித்து, தீக்கொளுத்தினார்கள். அந்த நிகழ்வுதான் மாயை பொருட்களின் எரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

மலைப்பிரசங்கத்தின் சில அதிர்ச்சி தரும் செய்திகளால் உந்தப்பட்டு, ஸவனரோலா இப்படிப்பட்ட தீவிரப்போக்கில் இறங்கியிருக்கலாம். “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு” என்று இயேசு சொன்னார். மத்தேயு 5:29-30. இயேசு சொன்னவற்றிற்கு மேற்போக்காக அர்த்தம் கண்டால் முக்கியமான செய்தியைக் காணத் தவறிவிடுவோம். மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாக அர்த்தங்காணும்படிதான் மலைப்பிரசங்கம் முழுவதுமே அமைந்துள்ளது.  அதாவது நம்முடைய இருதயங்களின் நிலை எப்படியிருக்கிறது என்பது முக்கியம், ‘என் கவனம் சிதறியதால், பாவச்சோதனையால் அவ்வாறு செய்தேன்’ என்று சொல்வதில் பயனில்லை.

பொருட்களையும் கலைப்படைப்புகளையும் எரித்தது, காண்பதற்கு பிரமாண்டமான காட்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்த மக்களுடைய இருதயங்கள் மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். தேவனால் மட்டுமே இருதயத்தை மாற்றமுடியும். அதனால்தான் சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபிக்கிறார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” சங்கீதம் 51:10. நம்முடைய இருதயம் எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

சகல ஜனங்களின் தேவன்

நியூஸ்பாய்ஸ் என்கிற கிறிஸ்தவ இசைக்குழுவின் முதன்மை பாடகராக இருந்தவர் பீட்டர் ஃபர்லர். “அவர் அரசாளுகிறார்” என்கிற துதிப்பாடலை தங்களுடைய குழுவினர் பாடும்போது ஏற்பட்ட அனுபவத்தை அவர் சொல்லுகிறார். சகல கோத்திரத்தாரும் தேசத்தாரும் ஒன்றுகூடி, தேவனைத் தொழுதுகொள்வதை அப்படியே தத்ரூபமாக அப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. இந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் கூடியிருக்கும் விசுவாசிகள் மத்தியில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலை உணரமுடிந்ததாக ஃபர்லர் கூறுகிறார்.

“அவர் அரசாளுகிறார்” பாடலின்போது ஃபர்லர் கண்டு அனுபவித்த அதே அனுபவம் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமில் கூடியிருந்த விசுவாசிகள் மத்தியிலும் உண்டானது. சீடர்களை பரிசுத்த ஆவியானவர் நிரப்பியபோது (அப் 2:4), அங்கே விசேஷித்த ஓர் அனுபவம் உண்டானது. அதனால், சகல தேசங்களிலிருந்தும் கூடியிருந்த யூதர்கள் குழம்பிப்போனார்கள்; ஏனென்றால், அங்கே தேவனுடைய கிரியைகள் வெளிப்படும்படிக்கு அவரவர் தங்கள் சொந்த மொழியில் பேசப்படுவதைக் கேட்டனர் . வச 5-6,11. “யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்” என்று பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் தேவன் சொல்லியிருக்கிறபடியே நிகழ்வதாக அங்கிருந்தவர்களுக்கு பேதுரு விளக்கினார். வச .16

அனைவரும் பிரமிக்கத்தக்க தேவவல்லமை அங்கு வெளிப்பட்டதினாலே, சுவிசேஷத்தை பேதுரு போதித்தபோது மக்கள் உடனே ஏற்றுக்கொண்டார்கள்; அன்றைய தினத்தில் மட்டும் மூவாயிரம்பேர் மனந்திரும்பினார்கள். வச 41. இந்த அற்புதமான ஆரம்பத்துடன், தங்கள் தங்கள் பகுதிக்குத் திரும்பிச்சென்ற புதிய விசுவாசிகள், அங்கே சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

அந்த நற்செய்தி இன்றும் எதிரொலித்து வருகிறது. அனைத்து மக்களுக்கும் தேவன் தருகிற நம்பிக்கையின் செய்தி அது. நாம் ஒன்றுசேர்ந்து தேவனைத் துதிக்கும்போது, அவருடைய ஆவியானவர் நம் மத்தியில் அசைவாடுவார், சகல தேசங்களிலுள்ள மக்களிலும் அற்புதமான ஓர் ஐக்கியத்தை உண்டாக்குவார். அவர் அரசாளுகிறார்!

பரத்திலிருந்து விடுதலை

கோணலான கோபுரத்தின் உச்சப்பகுதி

பரிசுத்தவான்களும் பாவிகளும்

யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.

படைப்புகளின் பாடல்

ஒலி வானியலைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் வளிமண்டலத்திற்கு அப்பாலிருந்து வரும் ஒலியையும், துடிப்புகளையும் கண்காணிக்கவும், கேட்கவும் முடிகிறது. நாம் இரவில் காணும் வினோதமான வான்வெளியில் விண்மீன்கள் அமைதியாக சுழல்வதில்லை, அவை ஒருவகை இசையை எழுப்புகின்றன என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கூன்முதுகு திமிங்கலங்கள் நாம் கேட்க முடியாத ஒலியை எழுப்புவது போல, விண்மீன்களின் ஒலியும் மனித செவிகளால் கேட்கக் கூடாத அலை நீளத்திலும், அதிர் வெண்ணிலும் இருக்கின்றது. விண்மீண்களும், திமிங்கலங்களும் மற்றும் படைப்புகள் யாவும் இணைந்து, பல அங்கங்களைக் கொண்ட, ஒரு கலவை இசையை எழுப்பி தேவனுடைய மகத்துவங்களை தெரிவிக்கின்றன.

சங்கீதம் 19:1-4ல், “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது. இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. அவைகளுக்கு பேச்சுமில்லை; வார்த்தையுமில்லை அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. ஆகிலும், அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்" எனக் காண்கின்றோம்.

புதிய ஏற்பாட்டில் பவுல் அப்போஸ்தலன், “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும், பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படகிறவைகளும், காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும்... சகலமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது (கொலோ. 1:16) என இயேசு கிறிஸ்துவைக் குறித்து வெளிப்படுத்துகின்றார். அதற்குப் பதிலாக இயற்கை உலகின் உயரமும், ஆழமும் தன்னுடைய படைப்பாளியைப் பாடுகின்றன. நாமும் படைப்புகளோடு இணைந்து “வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்த" (ஏசா. 40:12) அவருடைய மகத்துவங்களைப் பாடுவோம்.